
சுங்கை பூலோ – மே-25 – கூண்டிலிருக்கும் குரங்கின் மீது நீல நிற சாயத்தை _spray_ அடித்து வைரலான ஆடவர் கைதாகியுள்ளார்.
சட்டம் 716 என அழைக்கப்படும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் 86-ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின் படி, PERHILITAN எனப்படும் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறை அந்நபரைக் கைதுச் செய்தது. சுங்கை பூலோ போலீஸ் தலைவர் மொஹமட் ஹஃபிஸ் முஹமட் நோர் அதனை உறுதிப்படுத்தினார்.
முன்னதாக facebook-கில் வைரலான வீடியோ தொடர்பில் பெட்டாலிங் மாவட்ட கால்நடை சேவைத் துறை அதிகாரி ஒருவர் போலீஸில் புகார் செய்திருந்தார். எனினும் அதன் விசாரணை பின்னர் PERHILITAN-னிடம் ஒப்படைக்கப்பட்டது.
அச்சம்பவம் ஷா ஆலாம், U17, தாமான் டேசா மொக்கிஸ் பகுதியில் ஒரு வீட்டின் வெளியே நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. வாயில்லா பிராணிகளையும் விலங்குகளையும் மனிதாபிமானம் இல்லாமல் இப்படி துன்புறுத்துவது கூடாது என பொது மக்களை ஹஃபிஸ் நினைவுறுத்தினார்.
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அவர்கள் மறந்துவிட வேண்டாமென்றும் ஹஃபிஸ் கேட்டுக் கொண்டார்.
விலங்குகளைத் துன்புறுத்தும் குற்றத்திற்கு சட்டம் 716-ன் கீழ் அதிகபட்சம் 50,000 ரிங்கிட் அபராதமும் ஓராண்டு சிறையும் விதிக்க முடியும். வைரலான வீடியோவில் ஒரு பெரியவர், கூண்டிலிருக்கும் குரங்கின் மீது நீல நிற சாயத்தை _spray_ அடிப்பதையும், எரிச்சல் ஏற்பட்டு குரங்கு கத்துவதையும் காண முடிந்தது.
வீடியோவைப் பார்த்து கொதித்துப் போன வலைத்தளவாசிகள், அவ்வாடவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.