
சுங்கை பட்டாணி, மார்ச்-15-கெடா மாநிலத்தில் கட்டப்படவுள்ள புதிய இந்து மின் சுடலை மையத்துக்கு அரசாங்கம் 2.5 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
பல ஆண்டுகளாக இந்தியச் சமூகத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் விண்ணப்பங்களுக்கு செவிசாய்த்து, பிரதமருடன் தாம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியன் பலனாக இந்த மானியம் வழங்கப்பட்டதாக, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் தெரிவித்தார்.
சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தின் மேற்பார்வையில் நடைபெறும் இத்திட்டம், அடுத்தாண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் நிறைவடைய வேண்டும் என, செய்தியாளர் சந்திப்பில் அவர் கேட்டுக் கொண்டார்.
அரசாங்கம் வழங்கியது போக, நிதிப் பற்றாக்குறை நிலவினால் ஆலய நிர்வாகமே அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமென்றும் சண்முகம் கூறினார்.
இவ்வேளையில், நிலம் மற்றும் அரசு அலுவலக அனுமதிகள் தொடர்பான பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்றும், கூடுதல் நிதி தேவைகளை ஆலய நிர்வாகமே மேற்கொள்ளும் என்றும் ஆலயத் தலைவர் பெ. ராஜேந்திரன் தெரிவித்தார்.
சுமார் 10 ஆண்டுகளாக தொடர்ந்து செய்யப்பட்ட முயற்சிகளின் பலனாக, இன்றைய மடானி அரசாங்கத்தின் வழி இந்த மானியம் கிடைத்திருப்பதற்கு உள்ளூர் மக்கள் சார்பில் அனைவருக்கும் அவர் நன்றித் தெரிவித்தார்.



