
பெந்தோங், ஜனவரி-8 – கெந்திங் மலையில் 10,000 ரிங்கிட் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீஸில் பொய்ப் புகார் அளித்த வெளிநாட்டு பெண்ணை, பெந்தோங் போலீஸ் விசாரித்து வருகிறது.
25 வயதான அப்பெண், ஒரு ஹோட்டல் முன்பாக 2 பெண்கள் தன்னை தாக்கி பணத்தை பறித்துவிட்டதாக முதலில் கூறினார்.
ஆனால், சம்பவ இடத்தின் CCTV காட்சிகள் எந்தத் தாக்குதல் அல்லது கொள்ளையும் நடக்கவில்லை என்பதை உறுதிச் செய்தன.
சந்தேகமடைந்த போலீஸ் விசாரணையில் இறங்கியதில், அந்தப் பணம் உண்மையில் கேசினோ சூதாட்டத்தில் இழந்தது என்றும், இதை தனது காதலன் அறிந்தால் திட்டுவார் என்ற பயத்தில் பொய்யான புகார் கொடுத்ததும் தெரியவந்தது.
தனிப்பட்ட அடையாள ஆவணங்களையும் முறையான பயணப் பத்திரங்களையும் வழங்கத் தவறியதால், குடிநுழைவுச் சட்டத்தின் கீழும் அவர் விசாரிக்கப்படுகிறார்.
பொய்ப் புகார் வழங்கியதற்கு அதிகபட்சம் 6 மாத சிறை, 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம்.
அதே சமயம், குடிநுழைவுக் குற்றங்களுக்கு 5 ஆண்டுகள் சிறையும் 10,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.



