
கோலாலம்பூர், ஜூன்- 4 – நடப்பு நிர்வாகத்தின் சுலோகங்களை அரசாங்க மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பெயராக வைக்கும் நடைமுறையை நிறுத்துமாறு, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒருவேளை அரசாங்கம் மாறினால், இத்திட்டங்களால் மக்கள் பணத்திற்கு தான் விரயம் என பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்த தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைஃபுல் வான் ஜான் கூறினார்.
புத்ராஜெயாவில் 102 ஏக்கர் நிலப்பரப்பில் ‘கோத்தா மடானி’ மேம்பாட்டுத் திட்டத்தை கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr சாலிஹா முஸ்தாஃபா நேற்று அறிவித்தது குறித்து அவர் கருத்துரைத்தார்.
30,000 பேருக்கான 10,000 குடியிருப்புக் வீடுகளை உள்ளடக்கிய அத்திட்டத்தின் பூமி பூஜை வரும் ஜூன் 26-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
அரசாங்கங்கள் மாறும் போது கண்டிப்பாக அந்த சுலோக முத்திரைகளும் மாறும்; இதனால் பண விரயம் ஏற்படும்.
ஆகவே அரசாங்கங்கள் மாறினாலும் நீடித்து நிலைத்திருக்கும் வகையிலான பெயர்களை முன்வைப்பதே சிறந்ததாக இருக்குமென வான் சைஃபுல் சொன்னார்.
எனவே ‘கோத்தா மடானி’ திட்டத்தின் பெயரை மாற்றுமாறு அவர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.
இதற்கு முந்தைய அரசாங்கங்களும் சுலோகங்களைப் பயன்படுத்தி வருகின்றன.
டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் ஆட்சியில் ‘ஒரே மலேசியா’ (1 Malaysia) , தான் ஸ்ரீ முஹிடின் யாசின் ஆட்சியில் ‘ பரிவுமிக்க அரசாங்கம் (Kerajaan Prihatin), டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி ஆட்சியில் ‘மலேசியக் குடும்பம்’ (Keluarga Malaysia) ஆகியவை குறிப்பிடத்தக்க சுலோகங்களாகும்.