
கோலாலம்பூர், ஜூன்-1 – அமைச்சர் பதவியில் தான் தொடருவதா இல்லையா என்பதை பிரதமரின் முடிவுக்கே விட்டு விடுவதாக, அம்னோவிலிருந்து விலகியுள்ள தெங்கு டத்தோ ஸ்ரீ சாஃவ்ருல் தெங்கு அப்துல் அசிஸ் கூறியுள்ளார்.
தற்போதைக்கு தனது கவனம் முழுக்க ஹஜ் யாத்திரையில் இருப்பதாகவும் மேற்கொண்டு எதுவும் கருத்துரைக்க விரும்பல்லை எனவும் அவர் சொன்னார்.
மெக்காவுக்குப் புறப்படும் முன் KLIA-வில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அம்னோவிலிருந்து விலகி பி.கே.ஆரில் இணைவதாக தெங்கு சாஃவ்ருல் நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இது அம்னோவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
கூட்டணி கட்சியிலிருக்கும் உறுப்பினரைத் ‘திருடுவது’ கூட்டணி தர்மத்திற்கு எதிரானது என அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி சாடியிருந்தார்.
அதே சமயம், எது எப்படியிருந்தாலும் அமைச்சரவையில் அம்னோவுக்கு வழங்கப்பட்ட 7 முழு அமைச்சர் பதவிகள் நிலை நிறுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
முதலீடு, அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் என்ற பதவி சாஃவ்ருலுக்குக் கிடைத்ததே அம்னோ மூலமாகத் தான்.
இப்போது அம்னோவே வேண்டாம் என முடிவுச் செய்தவருக்கு எதற்கு இன்னும் அமைச்சர் பதவி? விலக வேண்டியது தானே என கலகக்குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் அனைவரின் கண்களும் டத்தோ ஸ்ரீ அன்வார் என்ன செய்யப் போகிறார் என்பதிலேயே தற்போது குறியாக உள்ளன.