
கோலாலம்பூர், ஜூன்-16 – கோலாலம்பூர், ஜாலான் முன்ஷி அப்துல்லாவில் பாழடைந்த பேரங்காடியில் போலிவூட் நடன பாணியில் இயங்கி வந்த இரவு கேளிக்கை விடுதிகளில், நேற்று போலீஸார் அதிரடிச் சோதனை நடத்தினர்.
அந்த 6-மாடி கட்டடத்தில் ஒவ்வொரு தளத்திலும் ஒரு போலிவூட் கேளிக்கை விடுதி செயல்பட்டு வந்துள்ளது.
அவ்வகையில் 6 கேளிக்கை மையங்களில் 95 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது.
அதில், முறையான பயண பத்திரம் இல்லாதது, வேலை பெர்மிட் வைத்திருக்காதது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக 1 பெண் உட்பட 8 பேர் கைதாகினர்.
அவர்களில் மூவர் வங்காளதேச ஆடவர்கள், மூவர் இந்திய நாட்டவர்கள் ஒருவர் பாகிஸ்தானிய ஆடவர்.
இன்னொருவர் இந்தோனேசியப் பெண் ஆவார்.
28 முதல் 43 வயதிலான அவர்கள் மேல் நடவடிக்கைக்காக டாங் வாங்கி போலீஸ் நிலையம் கொண்டுச் செல்லப்பட்டனர்.
அந்த போலிவூட் கேளிக்கை விடுதிகள், சுற்றுப்பயணிகள், உள்ளூர்வாசிகள், இந்தியா மற்றும் வங்காளதேச தொழிலாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகும்.
வங்காளதேசம், நேப்பாளம் மற்றும் பாகிஸ்தானியப் பெண்கள், சேலை அணிந்த நடனமணிகளாக அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
ஓர் இரவுக்கு 200 ரிங்கிட் சம்பளத்தில் உள்ளூர் பெண்களும் வேலை செய்வது விசாரணையில் கண்டறியப்பட்டது