
உலு லங்காட், ஜூன்-1 – சிலாங்கூர் உலு லங்காட்டில் எண்ணெய் நிலையமொன்றில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியருக்கு, சக ஊழியர்கள் ஏற்பாடு செய்த பிரியாவிடையால் உணர்ச்சி மிகுதியில் அவர் கண் கலங்கும் வீடியோ சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது
@jnnah837 என்ற டிக் டோக் கணக்கில் பதிவேற்றப்பட்ட 36 வினாடி அவ்வீடியோ வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
Sojib என அடையாளம் கூறப்பட்ட அவ்வாடவர், 10 ஆண்டுகளாக மலேசியாவில் பணிபுரிந்த பின் உடல்நலம் காரணமாக தாய் நாடு திரும்புகிறார்.
அனைவரின் நன்மதிப்பையும் பெற்றவர் என்பதால், வேலையின் கடைசி நாளில் அவருக்குத் இன்ப அதிர்ச்சியாக சக ஊழியர்கள் அவருக்கு பிரியாவிடை நடத்தினர்.
KFC இறைச்சிகளோடு, ‘Bye Sojib’ என்ற எழுத்தில் கேக்கும் வாங்கப்பட்டிருந்ததைக் கண்டு Sojib நெகிழ்ந்துபோனார்.
சுற்றி நிற்கும் நண்பர்கள் முன்னிலையில் உணர்ச்சியை அடக்க முடியாமல் அவர் கண் கலங்குவதும், முகத்தை சட்டையால் மூடிக் கொள்வதும் வலைத்தளவாசிகளையும் நெகிழ வைத்தது.
நல்லவர்கள் என்றுமே பின்புலம் பார்க்கப்படாமல் கொண்டாடப்படுவார்கள் என பலர் கருத்துத் தெரிவித்தனர்.
தாயகம் திரும்பும் Sojid அங்கு மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தொடரவும் பலர் வாழ்த்தினர்.