
ஆயர் குரோ, டிசம்பர்-24 – மலாக்கா, ஆயர் குரோ R&R , அருகே, PLUS நெடுஞ்சாலையின் 204-வது கிலோ மீட்டரில் நேற்றிரவு நிகழ்ந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 33 பேர் காயமடைந்தனர்.
3 சிறார்கள் உட்பட 8 பேரை ஏற்றியிருந்த MPV இரகத்திலான Toyota Estima கார், 2 ஓட்டுநர்கள் உட்பட 29 பேருடன் சென்ற சுற்றுலா பேருந்து, 2 பேருடன் சென்ற டிரேய்லர் லாரி ஆகிய 3 வாகனங்கள் அதில் சம்பந்தப்பட்டன.
தகவல் கிடைத்து 2 தீயணைப்பு நிலையங்களிலிருந்து 27 பேர் கொண்ட குழு சம்பவ இடம் விரைந்தது.
மீட்புப் பணிகளின் போது Toyota Estima காரிலிருந்தவர்களில் ஒரு குழந்தை உட்பட ஐவர், சுற்றுலா பேருந்திலிருந்த ஒரு பெண் பயணி, அதன் ஓட்டுநர்களில் ஒருவர் என 7 பேர் உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டது.
அவர்களின் உடல்கள் மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
காயமடைந்தவர்கள் மலாக்கா மருத்துவமனை, அலோர் காஜா மருத்துவமனை மற்றும் ஆயர் குரோ பந்தாய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டு வருவதாக போலீஸ் கூறியது.
அவ்விபத்தால், ஆயர் குரோ நெடுஞ்சாலையிலிருந்து சிம்பாங் அம்பாட் செல்லும் வழியில் இரு வழிப் பாதைகளிலும் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் நெரிசல் நிலவியது.