
கோலாலும்பூர், ஜூன் 10 – அத்தியாவாச தேவைகள் பட்டியலில் இடம்பெறாத பொருட்களான ‘கிங் கிராப்’, சால்மன் மீன் உற்பத்திகள், ‘டிரஃபிள்’ காளான்கள், இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள், ‘எசென்ஷியல்’ எண்ணெய் வகைகள் (Essential oils), பட்டு துணிகள் மற்றும் தொழில்துறை இயந்திரங்கள் போன்றவைகளுக்கு, வருகின்ற ஜூலை 1-ஆம் தேதி முதல் 5.0 சதவீத விற்பனை வரி உட்படுத்தப்படவுள்ளதாக மலேசிய நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
2025-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட, மறு ஆய்வு செய்த விற்பனை மற்றும் சேவை வரியின் (SST) வரம்பு, பொதுமக்களுக்குச் சுமையை ஏற்படுத்தாது என்றும், அதே வேளை நாட்டின் வருவாயை அதிகரிக்கவும் துணைபுரியுமென்றும் நிதித்துறை விளக்கப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த வரி அமலாக்கம் ஒட்டுமொத்த பொருட்கள் மீது செலுத்தப்படாமல், ஆடம்பர அல்லது அத்தியாவசியமற்ற இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு மட்டுமே வரி விதித்து, தேசிய வருவாயை அதிகரிப்பதே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கின்றது.
இருந்தபோதும், மேற்கண்ட ஆடம்பர பொருட்களை, ஆரோக்கிய அடிப்படையில், அன்றாட வாழ்வில் இயல்பாக பயன்படுத்தி வரும் பொதுமக்கள், அப்பொருட்களை அதிக விலையில் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆடம்பர இறக்குமதிகள் தேசிய வருவாயில் நியாயமான பங்களிப்பை உறுதி செய்வதோடு, பொதுமக்கள் உள்ளூர் உற்பத்திகளை தேர்வு செய்யும் வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.