
தெலுக் இந்தான், மே-9- பேராக், தெலுக் இந்தான் நகராண்மைக் கழக நிர்வாகத்தின் மீது கொண்ட அதிருப்தியில், ஆடவர் ஒருவர் அந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தின் கண்ணாடிக் கதவையே அடித்தே உடைத்திருக்கிறார்.
நேற்று காலை 10.15 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தின் வீடியோவும் வைரலாகியுள்ளது.
தகவல் கிடைத்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்ற போது, 61 வயது அம்முதியவர் நகராண்மைக் கழக பணியாளர்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்தார்.
விசாரித்ததில், மோட்டார் சைக்கிளில் வந்த அந்நபர், அதனை அலுவலகத்தின் முன் நிறுத்தியுள்ளார்.
பிறகு சுத்தியலை கொண்டு வந்து 2 கண்ணாடி கதவுகளையும் அவர் அடித்து உதைத்தார்.
ஒன்றும் நடக்காதது போல், ஜாலான் பண்டாரில் உள்ள தனது கடிகாரக் கடையை நோக்கி கிளம்பியவரை, நகராண்மைக் கழக ஊழியர்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.
ஒவ்வோர் ஆண்டும் சித்திரா பௌர்ணமியின் போது தனது கடையின் முன்புறம் நகராண்மைக் கழகம் கூடாரம் போடுவதால் ஏற்பட்ட அதிருப்தியாலேயே, தாம் அவ்வாறு செய்ததை அம்முதியவர் போலீஸிடம் ஒப்புக் கொண்டார்.
கூடாரத்தை விரித்து விடுவதால், தான் நடத்தி வரும் கடிகார பழுதுபார்ப்பு கடை வாடிக்கையாளர்களின் பார்வையை மறைத்து விடுகிறது; எத்தனையோ புகார்கள் செய்தும் நகராண்மைக் கழகப் கண்டுகொள்ளவே இல்லை என்பதே அவரின் வாதம்.
இந்நிலையில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக அவர் விசாரிக்கப்படுகிறார்.
அவரைத் தடுத்து வைக்க இன்று நீதிமன்ற ஆணைப் பெறப்படும் என தெலுக் இந்தான் போலீஸ் கூறியது.