
கூலாய், மே 28 – வாராந்திர லாபம் தருவதாக வாக்குறுதி அளித்த போலி முதலீட்டை நம்பி, 169,500 ரிங்கிட் பணத்தை இழந்துள்ளார் கூலாயைச் சார்ந்த 30 வயது மதிக்கத்தக்க பொறியியலாளர் ஒருவர்.
வாரம் ஒரு முறை 20 சதவீத இலாப பணம் கிடைக்குமென்ற நம்பிக்கையில், ஏப்ரல் 3 முதல் மே 22 வரை உள்ளூர் வங்கிக் கணக்கில் மொத்தம் 169,500 ரிங்கிட் தொகையை அவர் செலுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்நபர், தான் ஈட்டிய மொத்த இலாப பணம் 422,662.34 ரிங்கிட்டை பெற முயற்சிக்கும் பொழுது, அம்மோசடிக் கும்பல் மேலும் 80,000 ரிங்கிட்டை செலுத்தவேண்டுமென்று கூறியுள்ள நிலையில், தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல்துறையினரிடம் புகார் அளித்தாக கூலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர், டான் செங் லீ தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ், விசாரிக்கப்படுமென்றும், பொதுமக்கள் இத்தகைய மோசடி கும்பலிடமிருந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.