
கோலாலம்பூர், ஜூன் 17 – இஸ்ரேலுடன் தற்போது ஈரானுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தொடர்ந்து அந்நாட்டிலிருந்து மலேசிய பிரஜைகளை அழைத்துவருவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லையென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
ஈரானிலிருந்து தனது பிரஜைகளை நாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கையை எடுப்பதற்கு மலேசியா முடிவு செய்துள்ளதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அளித்த சுருக்கமான பதிலில் பிரதமர் இத்தகவலை வெளியிட்டார்.
ஈரானில் இருக்கும் மொத்த மலேசியர்கள் அல்லது அவர்களை நாட்டிற்கு கொண்டு வருவதன் தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை எதனையும் இன்னும் அரசாங்கம் வெளியிடவில்லையென அவர் கூறினார். ஈரானுக்கும் இஸ்ரேலுக்குமிடையே விமான தாக்குதல்கள் உட்பட பல்வேறு சம்பவங்களினால் ஈரானில் பதட்டநிலை அதிகரித்து வருவது அனைத்துலக சமூகத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அதே வேளையில் இப்போதைக்கு ஈரான் , ஈராக் மற்றும் ஜோர்தானுக்கு முக்கியம் இல்லாத பயணத்தை ஒத்திவைக்கும்படி மலேசிய மக்களுக்கு வெளியுறவு அமைச்சு இதற்கு முன் ஆலோசனை தெரிவித்திருந்தது.