பேராக், 9 பிப் – ஈப்போவில் அதிகமான இந்திய மாணவர்கள் பயின்று வரும் சுங்கை பாரி ஆண்கள் இடைநிலைப்பள்ளியில் பிற இன ஆசிரியர்களோடு மாணவர்களும் இணைந்து நேற்று சிறப்பாக பொங்கல் விழாவை கொண்டாடினர்.
1965 முதல் செயல்படும் இப்பள்ளி ஒவ்வொரு வருடமும் பொங்கல் விழாவை கொண்டாடி வருவது வழக்கமாகும். இதனிடையே நேற்று பள்ளி அளவிலான, இந்த ஆண்டின் பொங்கல் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. பொங்கல் வைத்தல், உறியடித்தல், தோரணம் கட்டுதல், கோலம் போடுதல், கரும்பு கடித்தல் என 5 போட்டிகள் இந்நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என பள்ளியின் மனநல ஆசிரியரும் இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளருமான யோகேஸ்வரன் முனியாண்டி தெரிவித்தார்.
ஏறக்குறைய 150 மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். பொங்கல் வைத்தல் போட்டியுடன் பரிசளிப்பு விழாவுடன் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் திரு. பலராமன் கிருஷ்ணன் உட்பட பிரமுகர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
தற்போது பலராமன் கிருஷ்ணனின் தலைமையில் இயங்கும் இப்பள்ளியில் 300 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் 90 விழுக்காட்டினர் இந்திய ஆண் மாணவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.