
கோலாலம்பூர், டிசம்பர்-2 – சிலாங்கூர், சுங்கை பூலோவில் பள்ளியொன்றின் பணியாளர் நாயை அடித்தே கொன்ற சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது.
அப்பள்ளியில் பயிலும் ஒரு மாணவரின் தாயார் அது குறித்து போலீசில் புகார் செய்தார்.
‘Divenyasshni’ என்ற பெயரில் அவர் தனது டிக் டோக் பக்கத்தில் பதிவேற்றிய சம்பவ வீடியோவும் வைரலாகியுள்ளது.
அதில், நாய் பேச்சு மூச்சின்றி தரையில் படுத்துகிடப்பது தெரிகிறது.
வெள்ளிக்கிழமை தனது பிள்ளை மூலமாக தகவலறிந்து பள்ளிக்குச் சென்ற அம்மாது, ஆசிரியரிடமும் பள்ளித் தூய்மைப் பணியாளரிடமும் விளக்கம் கேட்டுள்ளார்.
நாயின் கழுத்து பள்ளிப் பள்ளிவாசலின் வேலியில் சிக்கிக் கொண்டதாகவும், சம்பந்தப்பட்ட பணியாளர் அது சாகும் அளவுக்கு அதன் தலையில் அடித்து பின்னர் மண்ணில் புதைத்ததாகவும் கூறினார்.
சரி, நாயை புதைத்த இடத்தைக் காட்டுங்கள் என்றால் பள்ளி நிர்வாகம் ஒத்துழைக்க மறுத்திருக்கிறது.
இதையடுத்தே அதிருப்தியில், அரசு சாரா இயக்கத்தின் பணியாளருமான அம்மாது போலீசில் புகார் செய்தார்.
விலங்குகளுக்கு எதிரான சதிநாச வேலை என்ற கோணத்தில் குற்றவியல் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.