
மூவார், ஜூன்-10 – ஜோகூர் மூவார், தாமான் சாக்கேவில் சூதாட்டத் தோல்வியால் ஒரு பள்ளிவாசல் அருகே ஏற்பட்ட சண்டை வன்முறையாக மாறியதில், நால்வர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் நால்வர் கைதாகி லாக்கப்பில் உள்ளனர்.
திங்கட்கிழமை விடியற்காலை 1 மணியளவில் சுமார் 20 பேருக்கு இடையில் மூண்ட சண்டை சற்று நேரத்தில் ஆயுதத் தாக்குதலாக மாறியது.
இதனால் நள்ளிரவில் அப்பகுதி வாழ் மக்கள் தூக்கம் கலைந்து கலவரமடைந்தனர்.
தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்துசேர்ந்த போலீஸ், நால்வரை கைதுச் செய்தது; தப்பியோடிய எஞ்சிய நபர்கள் தீவிரமாகத் தேடப்படுகின்றனர்.
காயமடைந்த நால்வர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அப்பகுதியில் மேலும் தொந்தரவுகள் வராதிருக்க, போலீஸ் ரோந்து நடவடிக்கை மேம்படுத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோத சூதாட்டத்தில் ஏற்பட்ட தோல்வியே பிரச்னைக்கு மூலக் காரணம் என தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மூவார் போலீஸ் கூறியது