
புத்ரா ஜெயா, மார்ச் 20 – பஹாங் கேமரன் மலையில் மளிகைக் கடையில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த கருஞ்சிறுத்தையின் தலையை பெர்ஹிலித்தான் (PERHILITAN) எனப்படும் வனவிலங்கு மற்றும் பூங்காத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அந்த மளிகைக் கடையில் ஒருங்கிணைந்த திடீர் சோதனை நடத்தியபோது அந்த விலங்கின் வெட்டப்பட்ட தலை கண்டுப்பிடிக்கப்பட்டதாக தீபகற்ப மலேசியாவின் ஹெர்ஹிலித்தான் தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் காதிர் அபு ஹசிம் ( Abdul Kadir Abu Hashim ) தெரிவித்தார்.
பெர்ஹிலித்தான் அதிகாரிகளுடன், பொது நடவடிக்கை குழுவின் நான்கு உறுப்பினர்கள், பஹாங் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் கேமரன் மலை , கோலாத் தெர்லாவிலுள்ள (Kuala Terla) ஒரு கடை வீட்டில் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து 38, 65 மற்றும் 68 வயதுடைய மூன்று உள்நாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் கேமரன் மலை மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.
அந்த கருஞ்சிறுத்தையின் தலை 115,000 ரிங்கிட் மதிப்பை கொண்டதாகும் என அப்துல் காதிர் அபு ஹசிம் கூறினார்.
அவர்களுக்கு எங்கிருந்து கருஞ்சிறுத்தையின் தலை கிடைத்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.