
சென்னை, ஜூன்-22 – இந்தியாவின் அசாம் மாநிலத்திலிருந்து தமிழகத்தின் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் எரிபொருள் குறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து விமானி ‘Mayday’ என்ற அபாய அறிவிப்பை வெளியிட்டார்.
‘Mayday’ என்பது விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் அபாயத்தைக் குறிக்கும் வார்த்தையாகும்.
3 முறை விமானி ‘Mayday’ என அறிவித்து, எரிபொருள் கையிருப்புக் குறைந்துள்ளதைத் தெரிவித்தார்.
இதையடுத்து கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு விமான நிலையத்தில் விமானம் அவசரமாகத் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது.
பயணிகளுக்கு எதுவும் ஆகவில்லை என்றாலும், விமானியும் துணை விமானியும் பணிப்பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
எதற்காக ‘mayday’ என அறிவித்தார்; உண்மையிலேயே எரிபொருள் நிலவரம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குஜராத், அஹமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி மொத்தமாக 270-க்கும் மேற்பட்டோர் பலியானதிலிருந்து, இந்திய விமானங்களை உட்படுத்தி அடுத்தடுத்து விமானத் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவது பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது