
செபராங் பிறை உத்தாராவில் போலீஸ் & பொது நபரை தாக்கிய ஆடவன் மீது குற்றச்சாட்டு
பட்டர்வெர்த், பிப்ரவரி 11 –
லான்ஸ் காப்ரல் பதவியிலுள்ள ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் மற்றொரு நபரை ஜனவரி 31ஆம்தேதி வேண்டுமென்றே கோல்ப் மட்டையினால் காயப்படுத்தியதாக ஆடவன் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
30 வயதான அந்த ஆடவனுக்கு எதிரான குற்றச்சாட்டு மாஜிஸ்திரேட் ஐனி அடிலா முகமம் பைசால் ( Aini Adilah Muhammad Faizal) முன்னிலையில் வாசிக்கப்பட்டபோது அதனை மறுத்து விசாரணை கோரினான்.
26 மற்றும் 38 வயதுடைய இருவரை ஜனவரி 31ஆம்தேதி பிற்பகல் 2 மணியளவில் செபராங் பிறை உத்தாராவில், உள்ள தாமான் பாகான் அடுக்ககத்தில் தாக்கியதாக அந்த ஆடவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த நபருக்கு 5,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது.
மேலும் வழக்கு தீர்க்கப்படும் வரை பாதிக்கப்பட்டவரை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக கூடுதல் நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்தது. ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக இந்த வழக்கு மார்ச் 27 ஆம்தேதியன்று மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.



