
கோலாலாம்பூர், பிப்ரவரி-22-செராஸ், ஸ்ரீ மலாக்கா அடுக்குமாடி குடியிருப்பில் கத்தியுடன் ஆவேசமாக திரிந்த நபரை அமைதிப்படுத்த முயன்ற ஓர் ஆடவர் கத்தி வெட்டுக்கு ஆளானார்.
வெள்ளிக் கிழமை சந்தேக நபர் கத்தியேந்தி குடியிருப்பாளர்களை அச்சுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் துணிந்து, அவரை சமாதானப்படுத்த முயன்ற புகார்தாரரான ஆடவருக்கு இடது கையில் 3 செண்டி மீட்டர் அளவுக்குக் காயம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்டவர் அம்பாங் மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றார்; அச்சம்பவத்தில் மற்ற யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
20 வயதிலான சந்தேக நபரை போலீஸார் நேற்று கைதுச் செய்தனர்.
அவருக்கு ஏற்கனவே 10 குற்றப் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
தொடக்கக் கட்ட விசாரணையில், இந்த சம்பவம் வாகன நிறுத்துமிடம் தொடர்பான அதிருப்தியால் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.



