
கோலாலம்பூர், ஏப் 5 – ஜாலான் கிளாங் லாமா சாலையில் போக்குவரத்து விதிக்கு எதிராக வாகனம் ஓட்டியபோது பிடிபட்ட ஓட்டுநர், போலீஸ் துறையால் கைது செய்யப்படுவதற்கு முன் நேற்றிரவு மணி 8.35க்கு சரணடைந்தார் என கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர் உதவி கமிஷனர் முகமட் சம்சுரி தெரிவித்தார்.
சந்தேக நபருக்கு சுவாசப் பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் நடத்தப்பட்ட போதிலும் மது மற்றும் போதைப்பொருளை அவரை பயன்படுத்தவில்லை என தெரியவந்தது.
மிட் வேலிக்குச் செல்லும் வழியில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் தவறான பாதையில் சென்றது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்ததோடு இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதாக முகமட் சம்சுரி குறிப்பிட்டார்.
1987 ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 42(1)-இன் கீழ் இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
சந்தேக நபர் இன்று காலையில் ஜாலான் டூத்தா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என இதற்கு முன் முகமட் சம்சுரி கூறியிருந்தார்.
காலை சுமார் 11.38 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்த தகவலைப் பெற்ற போலீசார் , சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் வாகனத்தைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.
ஜாலான் கிளாங் லாமா மற்றும் ஜாலான் செபாடு (Jalan Sepadu ) சந்திப்பிலிருந்து தொடங்கி, ஜாலான் கிளாங் லாமா மற்றும் ஜாலான் கூச்சாய் லாமா சந்திப்பு வரை, சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு, காலை சுமார் 9.44 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என தெரியவந்தது.



