
செப்பாங், ஜனவரி-22, சீனப் புத்தாண்டுக்கான கையிருப்பு என நம்பப்படும் 11 வகையான பட்டாசுகள் மற்றும் வாண வெடிகள் அடங்கிய 1,330 பெட்டிகளை அரச மலேசிய சுங்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.
செப்பாங், பெரானாங்கில் உள்ள கிடங்கொன்றில் ஜனவரி 14-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவை கைப்பற்றப்பட்டன.
அவற்றின் மொத்த மதிப்பு 629,320 ரிங்கிட்டாகும்; செலுத்தியிருக்க வேண்டிய வரி மட்டுமே 377,592 என சுங்கத் துறை அமுலாக்கப் பிரிவு துணைத் தலைமை இயக்குநர் Raizam@Mustapa தெரிவித்தார்.
கிள்ளான் துறைமுகம் வாயிலாக அவை இறக்குமதியாகியுள்ளது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இறக்குமதி பாரத்தில் சரியான தகவல்கள் இடம்பெறவில்லை; அதாவது, பட்டாசுகளையும் வாண வெடிகளையும் தான் இறக்குமதி செய்கிறோம் என முறையாக அறிவிக்காமல், அதிகாரிகள் கண்களில் மண்ணைத் தூவி அவை கொண்டு வரப்பட்டுள்ளன.
AP பெர்மிட்டை வைத்திருந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் இறக்குமதியாளர் அவற்றை உள்ளே கொண்டு வந்துள்ளார்.
இதையடுத்து 1967-ஆம் ஆண்டு சுங்கத் துறை சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.