
ஜோகூர், பிப்ரவரி 6 – ஜோகூர் தங்காக்கிலிருக்கும் Sungai Mati Parit Bunga Laut பகுதியில் உள்ள ஒரு பண்ணையில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் உடல் கடுமையாக அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றுள்ளது. போலீசாரின் ஆய்வின்படி அந்த உடலின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும், சம்பவ இடத்தில் எந்த அடையாள ஆவணங்களும் கிடைக்கவில்லை என்றும் தங்காக் மாவட்ட காவல்துறை தலைவர் Superintendent Roslan Mohd Talib தெரிவித்தார்.
ஆரம்பகட்ட விசாரணையில் குற்றச்செயல் இடம்பெற்றதற்கான சான்றுகள் எதுவும் இல்லை என்றும், உயிரிழந்தவரின் அடையாளத்தை உறுதி செய்ய டிஎன்ஏ (DNA) பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, உறவினர் அல்லது அறிமுகமானவர்களை இழந்தவர்கள், Sungai Mati காவல் நிலைய போலீசாரை உடனடியாக தொடர்புகொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.



