
ஜோகூர் பாரு, ஏப் 2 – ஜோகூர் பாருவில் Bayu Puteri பகுதிக்கு அருகிலுள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில், ஜோகூர் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் நான்கு சீன பிரஜைகளை கைது செய்ததோடு 13 அனைதுலக கடப்பிதழ்களை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண் உட்பட, 43 முதல் 57 வயதுக்குட்பட்டவர்கள் என ஜோகூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்தி முகமட் டாருஸ் ( Mohd Rusdi Mohd Darus ) தெரிவித்தார்.
அவர்களில் ஒருவர் நாட்டிற்குள் நுழைவதற்கும் வசிப்பதற்கும் மெக்சிக்கோவின் போலி அனைத்துலக கடப்பிதழை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.
அவர்களின் குடியிருப்பு வளாகங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ஹாங்காங், சீனா மற்றும் வியட்நாம் போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 13 அனைத்துலக கடப்பிதழ்கள் கண்டெடுக்கப்பட்டதாக இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் முகமட் ருஸ்தி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள், ஜோகூர் பாரு மாவட்டத்தின் கோல்ப் கிளப் பகுதியில் தற்போது கட்டப்பட்டு வரும் ஒரு பொழுதுபோக்கு மையத்தில் பணிபுரிந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
அவர்கள் அனைவரும் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் 14 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



