
ஜோகூர் பாரு, ஜன 8 – Jalan Johor Baru – Air Hitam சாலையின் 11 ஆவது கிலோ மீட்டரில் நான்கு வாகனங்கள் விபத்துக்குள்ளான சம்பத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வேலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் சிக்கிக் கொண்டனர்.
சாலையில் இதர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே அந்த வழியாகச் செல்ல முடிந்தது.
இன்று காலை மணி 6.50க்கு ஏற்பட்ட அந்த விபத்தில் ஒரு பஸ்சும் மூன்று கார்களும் மோதிக்கொண்டதாக வட ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் அஸ்ரோல் அனுவார் நோர் ( Azrol Anuar Nor ) தெரிவித்தார்.
ஸ்கூடாயிலிருந்து சென்ற பஸ்ஸை 59 வயதுடைய ஓட்டுநர் நகரின் மையத்திற்கு ஓட்டிச்சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது என அஸ்ரோல் கூறினார்.
பஸ் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து அதே வழித்தடத்தில் சென்ற காரின் பின்னால் மோதினார். இதனால் பெண் பயணி ஒருவருடன் 42 வயதுடைய ஆடவர் ஓட்டிச் சென்ற அக்கார் அதன் முன்னாள் சென்ற மேலும் இரண்டு கார்களில் மோதியது.
பஸ்ஸினால் மோதப்பட்ட முதல் காரின் ஓட்டுநரும் அதில் இருந்த பயணியும் சிறு அளவில் காயத்திற்கு உள்ளானதால் அவர்கள் சுல்தானா அமினா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்த விபத்தில் பஸ் ஓட்டுநரும் இதர கார் கார்களின் ஓட்டுநர்களும் காயம் எதுவுமின்றி தப்பினர்.



