
ஜோகூர் பாரு, மே 22 – ஜோகூர் பாரு , ஸ்ரீ அலாம் பகுதியில் மாணவி ஒருவர் மானப்பங்கப்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு சமூக வலைத்தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து 28 வயது ஆசிரியர் ஒருவரை போலீசார் நேற்றிரவு 10.30 அளவில் கைது செய்தனர் .
மசாய் பகுதியில் உள்ள அந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர் மீது பல புகார்கள் அளிக்கப்பட்ட போதிலும், அவர் மீண்டும் ஆசிரியர் பணிக்குத் திரும்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முகமது பட்லி சாலே என்ற கணக்கிலிருந்து முகநூலில் பதிவேற்றப்பட்ட வைரல் பதிவை போலீஸ் கண்டறிந்ததாக, ஜோகூர் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ஹோ சுவான் ஹுவாட் ( Hoo Chuan Huat) கூறினார்.
இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவியின் 37 வயது தாயாரிடமிருந்து நேற்று இரவு 9 மணிக்கு போலீஸ்துறை புகாரை பெற்றது.
சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியருக்கு எதிராக கடந்த ஆண்டு முதல் போலீஸ் , கல்வி அதிகாரிகள் மற்றும் பொதுப் புகார்கள் பிரிவு ஆகியவற்றில் புகார்கள் அளிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்பட்டது.
பாதிக்கப்பட்ட 12 வயது மாணவி, பள்ளியில் உள்ள அந்த ஆசிரியருடன் பாலியல் உறவில் சம்பந்தப்பட்டதாக பள்ளி அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டதாக அந்தப் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டது.



