
ஜெலபு – ஜூலை-20 – அண்மையில் நெகிரி செம்பிலான், ஜெலபுவில் தனது டுரியான் பழத் தோட்டத்தில் இறந்துகிடந்த முதியவரின் சவப்பரிசோதனையில், மருத்துவர்கள் ஆச்சரியமடையும் அளவுக்கு, 158 ball bearings உலோகத் துகள்கள் அவரது நெஞ்சில் கண்டெடுக்கப்பட்டன.
12-துளை துப்பாக்கி தோட்டாக்களிலிருந்து அந்த பந்து தாங்கு உருளைகள் 67 வயது அவ்வாடவரின் நெஞ்சைப் பதம் பார்த்துள்ளன.
ரெம்பாவ் மருத்துவமனையின் தடயவியல் பிரிவு மருத்துவர்கள் அதனைக் கண்டறிந்தனர். எனினும் அம்மரணம் தொடர்பான விசாரணைத் தொடருவதாக, ஜெலபு போலீஸ் தலைவர் Azizan Said தெரிவித்தார்.
புதன்கிழமை நிகழ்ந்த சம்பவத்தில் குவாலா கிளாவாங்கில் உள்ள தனது டுரியான் தோட்டத்தில் அம்முதியவர் தன்னைத் தானே தவறுதலாகக் சுட்டுக் கொண்டு மாண்டிருக்கலாம் என முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
டுரியான் தோட்டத்துக்குப் போவதாகக் கூறி காலையில் வீட்டிலிருந்து கிளம்பியவர் மாலை வரை வீடு திரும்பாததால், குடும்பத்தார் போலீஸில் புகார் செய்தனர்.
சம்பவ இடத்தில் சோதனையிட்ட போலீஸ், கடைசியில் இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த முதியவரின் உடலைக் கண்டெடுத்தது. சடலமருகே சொந்தமாகக் கட்டையால் செய்யப்பட்ட சுடும் ஆயுதமும் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.