
தாவாவ், மே-12 – மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC ஒரு புது முயற்சியாக, மருந்துகளை ட்ரோன்கள் மூலம் அனுப்பும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சபா, தாவாவில் மே 9 தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெற்ற மடானி மக்கள் விழாவின் போது இந்த முன்னோடித் திட்டம் அறிமுகம் கண்டது.
அவ்விழாவில் பங்கேற்ற பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும், இப்புது முயற்சி குறித்து விளக்கப்பட்டது.
உட்புறப்பகுதிகள், தீவுகள், முறையான சாலை வசதிகள் இல்லாத பகுதிகள் போன்றவற்றில் வசிக்கும் மக்களுக்கு மருந்து மாத்திரைகளைக் கொண்டுச் சேர்ப்பதே இதன் நோக்கம் என, MCMC தெரிவித்தது.
சுகாதார அமைச்சு, மலேசிய தொழில்நுட்பம் மற்றும் புதுமை ஆராய்ச்சி மையம் மற்றும் உள்ளூர் ட்ரோன் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு இது மேற்கொள்ளப்படுகிறது.
இந்த முன்னோடி திட்டம் முதல் கட்டமாக இவ்வாண்டின் நான்காவது காலாண்டில், NADI எனப்படும் 2 தேசிய தகவல் பரப்பு மையங்களை உட்படுத்தி மேற்கொள்ளப்படும்.
அடுத்தாண்டு 150 NADI மையங்களுக்கும் 2027-ல் 392 மையங்களும் இது விரிவுப்படுத்தப்படும் என MCMC மேலும் கூறியது.