
பாரீஸ், ஜூன்-22, டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov), தனது விந்தணு தானத்தின் மூலம் பிறந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு 13.9 பில்லியன் டாலர் சொத்துக்களைப் பகிர்ந்து வழங்குவதாக அறிவித்துள்ளார்.
“அவர்கள் அனைவரும் என் குழந்தைகளே; என் காலத்திற்குப் பிறகும் அனைவரும் சம உரிமை பெறுவார்கள்; அவர்களை நான் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை” என்றார் அவர்.
3 துணைகளின் மூலம் பிறந்த 6 குழந்தைகளுக்கு தான் இவர் அதிகாரப்பூர்வ தந்தை.
மற்றவர்கள், 15 ஆண்டுகளுக்கு முன் விந்தணு தானம் செய்யத் தொடங்கியதன் விளைவாக 12 நாடுகளில் இவருக்கு பிறந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆவர்.
சொத்துக்களை எழுதி வைத்தாலும், குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வளர ஏதுவாக அவர்கள் 30 ஆண்டுகள் வரை சொத்தில் கை வைக்க முடியாத படி அவர் செய்துள்ளார்.
அதுவரை குழந்தைகள் தாங்களாகவே செல்வத்தை உருவாக்க கற்றுக்கொள்ள வேண்டும் என துரோவ் விருப்பம் தெரிவித்தார்.
பிரான்ஸ் அரசியல் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இவ்விவரங்களை பகிர்ந்துகொண்டார்.
டெலிகிராம் தொடர்பில் பல நாடுகள் தன்னைக் குறி வைத்திருப்பதால், எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற எண்ணத்தில் 40 வயதிலேயே உயிலை எழுதி விட்டதாக இவர் சொன்னார்.
குற்றச் செயல்களைக் குறைக்கும் வகையில், டெலிகிராம் செயலியை முறையாக நிர்வகிக்கத் தவறியதாக உலைக நாடுகளின் கடும் கண்டனத்திற்கு ஆளான துரோவ், கடந்தாண்டு பிரான்சில் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.