
கோலாலம்பூர், ஜூன்-12 – MPD எனப்படும் கைப்பேசி தரவுத் திட்டம் என்பது பொதுச் சேவைகள் மற்றும் தேசியத் திட்டமிடலுக்காக வடிவமைக்கப்பட்ட தனியுரிமைக்கு பாதுகாப்பான முயற்சியாகும்.
இது தனிப்பட்ட நபர்களை கண்காணிப்பதற்கான கருவி அல்ல என மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC தெளிவுபடுத்தியுள்ளது.
MPD திட்டமானது பெயர், அடையாள அட்டை எண் போன்ற
தனிப்பட்ட விவரங்கள் எதையும் உள்ளடக்காத, பெயரற்ற மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட இடதரவை பயன்படுத்துகிறது.
இந்தத் தரவுகள் தொலைத்தொடர்பு கோபுரங்களிலிருந்து பெறப்படுகின்றன; இவை உச்ச நேரங்களில் பயணப்போக்குகள், விடுமுறை காலங்களில் சுற்றுலா இடங்களில் கூட்ட அதிகரிப்பு, பேரழிவுகளில் மக்கள் வெளியேறும் தருணங்கள் போன்ற பொதுவான இயக்க முறைமைகளை அறிய உதவுகின்றன.
“உதாரணமாக, தினமும் 5,000 பேர் சிரம்பானில் இருந்து நீலாயிற்குச் செல்கிறார்கள் என்றால், போக்குவரத்துத் திட்டங்களை மேம்படுத்த அரசு முடிவெடுக்க இது உதவுகிறது”
“ஆனால் அந்த பயணிகள் யார் என்பது எங்களுக்குத் தெரியாது. இது போக்குவரத்து எண்ணிக்கை மாதிரி தான் — அதாவது எத்தனை வாகனங்கள் சென்றன என்பது தெரியுமே தவிர, யார் ஓட்டினார்கள் என்பது தெரியாது” என MCMC விளக்கியது.
இந்த தரவுகளைப் பெற MCMC மற்றும் மலேசிய புள்ளியியல்த் துறை அதிகாரப் பெற்ற சிலரே அனுமதிக்கப்படுவார்கள்.
இத்தரவு எந்தவொரு தனியார் நிறுவனங்களுக்கும் அல்லது விளம்பர நிறுவனங்களுக்கும் பகிரப்படாது.
இது அனைத்தும் அனைத்துலக தரநிலைகளைப் பின்பற்றி, கடுமையான கண்காணிப்பில் மேற்கொள்ளப்படுகிறது.
ஸ்பெயின், பிரேசில், இந்தோனேசியா போன்ற நாடுகளும் இதே போன்ற அணுகுமுறைகளை தேசியத் திட்டமிடல் மற்றும் அவசரகால நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி வருகின்றன.
MPD அமைப்பும் முறையாக தணிக்கை செய்யப்பட்டு, தவறான பயன்பாட்டைத் தடுக்கும் நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது.
மொத்த தரவுகள் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பாதுகாப்பாக வைத்திருக்கப்படுகின்றன; அவை MCMC க்கு அனுப்பப்படுவதில்லை.
தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படுவதில்லை என்பதால், தனிநபரின் அனுமதி தேவையில்லை என்றும் இது சாலை போக்குவரத்து எண்ணிக்கை அல்லது கூட்டம் எவ்வளவு என்பதை கணக்கிடுவது போன்று தான் என்றும் MCMC உறுதியளித்துள்ளது.