Latestமலேசியா

தற்போது அரசாங்க நிலங்களில் உள்ள கோவில்களுக்கு என்ன தீர்வு? சிவனேசனிடம் சிவகுமார் கேள்வி

பந்திங், ஜூன்-7 – 5 தலைமுறைகள் கடந்து 150 ஆண்டு கால பழைமை வாய்ந்த சிலாங்கூர், பந்திங், கெலானாங் பாரு ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் நேற்று தனது வருடாந்திர வைகாசி திருவிழாவைக் கொண்டாடியது.

சிறப்பு விருந்தினராக மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவரான டத்தோ என். சிவகுமார் கலந்துகொண்டார்.

திருவிழாவிலும் முக்கிய அம்சமான இரத ஊர்வலத்திலும் சுமார் 850 பேர் பங்கேற்றனர்.

திருவிழாவுக்குப் பிறகு வணக்கம் மலேசியாவிடம் பேசிய டத்தோ சிவகுமார், மலேசிய இந்துக்கள் எதிர்நோக்கும் முக்கியப் பிரச்னைகள் குறித்து கருத்துரைத்தார்.

நாட்டிலுள்ள ஆலயங்களின் தரவுகளை சேகரிப்பதாக மலேசிய இந்து சங்கம் கூறியுள்ளது பாராட்டுக்குரியது; ஆனால் அதற்கு மானியத்தை எதிர்பார்க்கக்கூடாது; வேண்டுமென்றால் மஹிமாவே அதனை இலவசமாக செய்து தரும்; ஆனால் சேகரித்த தரவுகளை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள் என சிவகுமார் கேள்வி எழுப்பினார்.

இவ்வேளையில், பேராக்கில் மாநில அரசுக்குச் சொந்தமான நிலங்களில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு கோயில் கட்ட தடை என்ற அறிவிப்பையும் அவர் பாராட்டினார்.

ஆனால், நடப்பில் அரசாங்க நிலங்களில் உள்ள கோயில்களின் பிரச்னைகளைத் தீர்க்க என்ன திட்டம் இருக்கிறது என அவர் வினவினார்.

இதனிடையே இவ்வாண்டு வைகாசித் திருவிழா குறித்து ஆலயத் தலைவர் ரெங்கநாதன் ஏழுமலை இவ்வாறு விவரித்தார்.

4 மில்லியன் ரிங்கிட் செலவில் ஆலயத்தைப் புதுப்பிக்கும் திட்டம் பற்றி குவாலா லங்காட் ம.இ.கா தலைவர் ஸ்ரீதரன் ரெங்கநாதன் பேசினார்.

ரெங்கநாதன் குடும்பம் சார்பில் டத்தோ சிவகுமார் முன்னிலையில் ஆலயத்திற்கு 1 லட்சம் ரிங்கிட் நன்கொடையும் வழங்கப்பட்டது.

இந்த வைகாசி திருவிழா, ஆன்மீக ஒன்றுகூடலாக மட்டுமல்லாமல் அடுத்தத் தலைமுறைக்காக கோயிலின் பாரம்பரியத்தை பாதுகாத்து மேம்படுத்தும் வாய்ப்பாகவும் அமைகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!