
கோலாலாம்பூர், செப்டம்பர்-3- நாட்டில் நிமோனியா, மூளைத்தொற்று மற்றும் மரணத்தில் கூட போய் முடியக் கூடிய தட்டம்மைப் பரவலை உடனே தடுக்க வேண்டுமென, செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் வலியுறுத்தியுள்ளார்.
கடந்தாண்டு மலேசியாவில் 3,791 தட்டம்மைச் சம்பவங்கள் பதிவாகின; முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் இது இரட்டிப்பாகும்; இதில் 44% குழந்தைகள் 5 வயதிற்குட்பட்டவர்கள் என, பினாங்கு சுங்கை பாக்காப் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநருமான அவர் சொன்னார்.
இந்நோய்ப் பரவலைத் தடுக்க, சுகாதார அமைச்சு தட்டம்மை & ருபேலா கூடுதல் தடுப்பூசி முகாம்களை ஆகஸ்ட் 4 முதல் அக்டோபர் 12 வரை நடத்துகிறது.
6 முதல் 59 மாதக் குழந்தைகள் அனைவருக்கும், இலவசமாக, மருத்துவமனைகள் மற்றும் வெளிப்புற முகாம்களில் இத்தடுப்பூசி வழங்கப்படுகிறது.
அரசாங்கம் RM16.3 மில்லியன் செலவில் 1.5 மில்லியன் தடுப்பூசிகளை வாங்கியுள்ளது; இந்நிலையில் 95%க்கும் மேற்பட்ட தடுப்பூசி அளவை எட்டினால், நோய்ப் பரவலை நிறுத்தி, புதிய அலைகளைத் தடுக்க முடியும்.
ஆனால் தடுப்பூசி போட குழந்தைகளைக் கூட்டிச் செல்வதில் பெற்றோர்களிடமிருந்து ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை என்றால், இம்முயற்சி பயனற்றதாகி விடும்.
எனவே, தடுப்பூசி கொடுப்பது நாளைய தலைமுறையைப் பாதுகாக்கும் என்பதை உணர்ந்து பெற்றோர்கள் செயல்பட வேண்டுமென லிங்கேஷ்வரன் வலியுறுத்தினார்.