
ஜாசின், மே 21 – ஜனவரி முதல் மலாக்காவில் டெலிக்கம் மலேசியா (TM) அணுகல் அட்டைகளைத் தீவிரமாகத் திருடியதாக சந்தேகிக்கப்படும் ஆடவன் ஒருவன் திங்கள்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டதாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan முகமட் ருஸ்லி மாட்
( Mohamad Rusli Mat ))தெரிவித்தார். குற்றத் தடுப்பு ரோந்துப் பணிகளை மேற்கொண்டிருந்த அதிகாரிகள், கம்போங் சிம்பாங் கெராயோங் பகுதியில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு சந்தேக நபர் டொயோட்டா விஷ் காரை ஓட்டிச் சென்றதை முதலில் கண்டனர். அந்த காரை நிறுத்தும்படி போலீஸ் குழுவினர் பலமுறை கேட்டுக்கொண்ட போதிலும் அந்த சந்தேக நபர் ஒத்துழைக்க மறுத்து, ஜாசின் நகரத்தை நோக்கி வேகமாகச் சென்றதால் அக்காரை போலீசார் துரத்திச் சென்றனர்.
சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்ற பின் அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஜாசின் தொழிற்கல்விப் பள்ளிக்கு அருகில் கவிழ்ந்தது. அப்போது அந்த சந்தேக பேர்வழி காரிலிருந்து இறங்கி தப்பி ஓட முயன்றபோதிலும் சிறு கைகலப்பிற்குப் பின் அவன் கைது செய்யப்பட்டான் என இன்று ஜாசின் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் முகமட் ருஸ்லி கூறினார். அக்காரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மொத்தம் 168,000 ரிங்கிட் மதிப்புள்ள 42 TM அணுகல் அட்டைகள், பல்வேறு திருட்டுப் பொருட்கள் மற்றும் கொள்ளையடிப்பதற்காக வீட்டை உடைக்கும் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நபர் கைதானதன் மூலம் ஜாசின் மற்றும் அலோர்காஜாவில் நடைபெற்ற 7 கொள்ளைச் சம்பவங்களுக்கு தீர்வு காணப்பட்டதாக முகமட் ருஸ்லி தெரிவித்தார்.