
திரெங்கானுவில் ‘ஆப்ஸ் மேகா’ சோதனை: 226 சட்டவிரோத குடியேறிகள் கைது
திரெங்கானு, பிப்ரவரி 16 –
நேற்று திரெங்கானு மெராங் (Merang) பகுதியில் உள்ள கட்டுமானத் தளத்தில் திரெங்கானு குடிநுழைவுத் துறை மேற்கொண்ட ஒருங்கிணைந்த ‘ஆப்ஸ் மெகா’ (Ops Mega) சோதனை நடவடிக்கையில் 226 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற சோதனையில் 64 அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதில் தேசிய பதிவுத்துறையான JPN, தொழிலாளர் துறை, கட்டுமான தொழில் மேம்பாட்டு வாரியமான CIDB, மலேசிய பாதுகாப்புப் படையான APM மற்றும் குடிநுழைவுத் துறையின் PASTAK சிறப்பு அணியும் இணைந்து செயல்பட்டன.
மொத்தம் 316 வெளிநாட்டவர்கள் பரிசோதிக்கப்பட்டதில், 226 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 222 பேர் வங்காளதேசத்தைச் சார்ந்தவர்கள் என்றும், மூவர் இந்தோனேசியர்கள் என்றும் மற்றும் ஒருவர் இந்திய நாட்டைச் சார்ந்தவர் என்றும் அறியப்படுகின்றது.
வேலை அனுமதி விதிமுறைகளை மீறுதல் போன்ற குற்றங்களே அதிகமாக பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மேல் நடவடிக்கைக்காக அஜில் குடிநுழைவுத் தடுப்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.



