
கிள்ளான், பிப்ரவரி-24 – சிலாங்கூர், கிள்ளானில் உள்ள தாமான் செந்தோசா தற்போது நகர அந்தஸ்தைப் பெற்றுள்ளது. மொத்த மக்கள் தொகை 100,000 பேரை நெருங்கியுள்ளது உட்பட சில நிபந்தனை அம்சங்களைப் பூர்த்திச் செய்திருப்பதை அடுத்து, தாமான் செந்தோசா நகரமாகியுள்ளது.
கிள்ளான் நகர மேயர் டத்தோ அப்துல் ஹமிட் ஹுசாய்ன் அதனை அறிவித்தார்.
2023 முதல் பல்வேறு கூட்டங்களையும் பல அரசு நிறுவனங்களுடன் இணைந்து ஆய்வுகளையும் நடத்தியதில், அம்முடிவு எடுக்கப்பட்டது.
நகரின் தோற்றத்தை மாற்ற, 2025-2035 செந்தோசா பத்தாண்டு கால செயல் திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது.
சொத்து மதிப்பை உயர்த்தி, பொருளாதார மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பததே அதன் நோக்கமாகும்.
செந்தோசா நகர் மென்மேலும் வளர, அனைத்துத் திட்டங்களும் படிப்படியாக நிறைவேற வேண்டும்; அதற்கு நகர மக்களும் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களும் கிள்ளான் அரச மாநகர மன்றத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என டத்தோ அப்துல் ஹமிட் கேட்டுக் கொண்டார்.
2,229 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட தாமான் செந்தோவை நகரமாக தரமுயர்த்துவது, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Dr குணராஜ் ஜியின் பரிந்துரையாகும்.
அதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளைப் பாராட்டுவதாக கிள்ளான் மேயர் தனதுரையில் கூறினார்.
இந்த பண்டார் செந்தோசா ஒரு பழையைக் குடியிருப்புப் பகுதியாகும்; அதன் எல்லையானது, 1963-ஆம் ஆண்டிலிருந்து பத்து அம்பாட் தோட்டத்தின் அசல் எல்லையிருந்து கணக்கிடப்பட்டது.
அன்றிலிருந்து அது கண்டு வரும் மாற்றமும் வளர்ச்சியும், நகர அந்தஸ்துக்கு உயர ஒரு காரணம் என டத்தோ அப்துல் ஹமாட் புகழ்ந்தார்.