
கோத்தா பாரு, மே 20 – கோத்தா பாரு , ஜாலான் தெமங்கோங்கிலுள்ள (Jalan Temenggong) நகைக்கடையில் நகை வாங்கும் வாடிக்கையாளரைப்போல் நடித்து
50,000 ரிங்கிட் மதிப்புள்ள தங்கச் சங்கிலியுடன் ஆடவன் தப்பியோடினான்.
தொப்பி அணிந்திருந்ததோடு கறுப்பு கண்ணாடியுடன் காணப்படும் அந்த ஆடவன் நகைக்கடையில் நகைகளை பார்வையிட்டபின் இந்த கொள்ளையில் ஈடுபட்டான்.
சனிக்கிழமை பிற்பகல் மணி 2.44 அளவில் நடைபெற்ற அந்த கொள்ளைச் சம்பவம் குறித்து முகநூல் மற்றும் Tik Tok சமூக வலைத்தளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பகிர்ந்ததோடு சம்பந்தப்பட்ட ஆடவனை கண்டுப்பிடிக்க உதவும்படி பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
அந்த சந்தேகப் பேர்வழி 109.25 கிரேம் எடையுள்ள தங்கச் சங்கிலியை வாங்கும் வாடிக்கையாளர்போல் கடை உதவியாளரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்ததோடு திடீரென அந்த சங்கிலியுடன் அங்கிருந்து வெளியேறி மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாக கூறப்பட்டது.
அந்த ஆடவனை கடையிலுள்ள பெண் ஊழியரும் மற்றொரு நபரும் துரத்திச் செல்லும் காட்சியும் அங்கிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
எனினும் அந்த கொள்ளையனை பிடிக்கும் முயற்சியில் அந்த இருவரும் தோல்வி கண்டனர். அந்த சந்தேகப் பேர்வழியின் உருவத்தை நன்கு காணும்வகையில் அது தொடர்பான மற்றொரு பதிவையும் பாதிக்கட்ட நகைக்கடையினர் திங்கட்கிழமையன்று முகநூல் மற்றும் டிக்டோக்கில் பதிவிட்டனர்.