
வாரணாசி, மார்ச்-30-இந்தியாவின் பெங்களூருவிலிருந்து வாரணாசி சென்ற இண்டிகோ விமானத்தின் அவசரக் கதவை பயணி ஒருவர் திறக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்றிரவு 8 மணிக்கு மேல் புறப்பட்ட 15 நிமிடங்களில் அப்பயணி கதவைத் திறக்க முயன்றார்.
முதல் முயற்சியை விமான ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.
ஆனால், விமானம் தரையிறங்க 500 அடி உயரத்தில் இருக்கும் போது மீண்டும் அவர் கதவைத் திறக்க முயன்றதால், விமானி தரையிறங்கலை இரத்துச் செய்து, வானிலேயே வட்டமடித்து பின்னர் பாதுகாப்பாக விமானத்தைத் தரையிறக்கினார்.
விமானப் பணியாளர்கள் அவ்வாடவரை உடனே தடுத்து, பயணிகளைப் பாதுகாத்து, வாரணாசியில் பத்திரமாகத் தரையிறக்கினர்.
விமான நிலையப் பாதுகாப்புக் குழுவினரால் அவர் உடனடியாகக் கைதுச் செய்யப்பட்டார்.
விசாரணையில் ‘தனக்கு பேய் பிடித்துவிட்டது’ என்றும், கழிவறை கதவு தான் என தவறாக நினைத்துத் திறந்ததாகவும் முன்னுக்குப் பின் முரணான வாக்குமூலங்களை அவர் அளித்துள்ளார்.
போலீஸார் வழக்குப் பதிவுச் செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.



