
புத்ராஜெயா, மே 19 – மலேசியாவில் போதைப்பொருளுக்கு அடிமையான மொத்தம் 192,857 நபர்களில் 61 விழுக்காட்டினர், 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹித் ஹமிடி தெரிவித்துள்ளார். அதில், பெரும்பகுதியானவர்கள், ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில மக்கள் தொகையில் அதிகமாக போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் பட்டியலில் கிளந்தான் , திரெங்கானு, பெர்லிஸ் மற்றும் கெடா முன்னிலை வகிப்பது வேதனைக்குரிய ஒன்று என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இளைய சமூகத்தை போதைக்கு அடிமையாவதிலிருந்து தடுப்பதற்கு, 2025-2027 போதைப்பொருள் எதிர்ப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதோடும் போதைப்பொருள் தொடர்பான குற்ற முறைகளை இன்னும் விரிவாக்கம் செய்வதற்கும், உள்துறை அமைச்சகம் முயற்சிகள் எடுத்து வருவதை குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து, போதைப்பொருள் சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் அமலாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய மருத்துவக் கொள்கையை (NDP) செயல்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது.