
கோலாலம்பூர், மார்ச்-15-போலீஸுக்கு பயந்து தாம் மலேசியாவை விட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, சர்ச்சைக்குரிய சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மறுத்துள்ளார்.
“எனக்கு ஓடி ஒளிய வேண்டிய காரணமே இல்லை, தேவைப்பட்டால் போலீஸ் படைத் தலைவரை நானே நேரில் சந்திக்க தயார்” என தனது ஃபேஸ்புக் பதிவில் அவர் தெரிவித்தார்.
புகார் எழுப்பப்பட்ட சம்பவங்களில் தன்னை மட்டும் குற்றம் சாட்டுவது குறித்தும் சம்ரி வினோத் கேள்வி எழுப்பியுள்ளார்.
“நான் என்ன குற்றம் செய்தேன்? ஏன் என்னை மட்டும் குற்றம் சாட்டுகிறார்கள்?” என்று அவர் வலியுறுத்தினார்.
யாரோ மக்களை ஏவி விட்டு ஏற்பட்ட சம்பவங்களுக்கு, அவர்களை விட்டு விட்டு தன்னை மட்டும் ‘பலிகடா’ ஆக்குவதா? என அவர் கூறிக் கொண்டார்.
சம்ரி வினோத்தின் ஃபேஸ்புக் பக்கத்தை திடீரென தற்போது பார்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
என்றாலும் அவரின் பதிவு ஏற்கனவே screenshot எடுக்கப்பட்டதால் வைரலாகி வருகிறது.
சம்ரி வினோத் மற்றும் சமூக ஆர்வலர் தமிம் டாஹ்ரி இருவரும் சட்ட நடவடிக்கைக்கு பயந்து தாய்லாந்துக்கு சென்றுவிட்டதாக போலீஸ் முன்னதாக உறுதிப்படுத்தியது.
தற்போது தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து இருவரையும் மீண்டும் மலேசியாவுக்கு கொண்டு வர PDRM முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
தாயகம் கொண்டு வரப்பட்டதும், இன-மத வெறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் பேரில் இருவரும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.



