
பெனாம்பாங், மே-30 – ஊழலை வேரறுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுவதால் தாம் ஒன்றும் சர்வாதிகாரி அல்ல என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
“இவரை கைதுச் செய்யுங்கள், அவரைக் கைதுச் செய்யுங்கள் என எதற்கெடுத்தாலும் ஆணையிடும் பிரதமர் நானல்ல; அது பிரதமரின் வேலையுமல்ல” என அவர் விளக்கினார்.
ஊழல் தொடர்பான எந்த விசாரணையும் ஆதாரங்கள் அடிப்படையிலும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.
மாறாக, தன்னிச்சையான உத்தரவுகளால் அல்ல என டத்தோ ஸ்ரீ அன்வார் தெளிவுப்படுத்தினார்.
என்ற போதிலும் ஊழல் துடைத்தொழிப்பு என்பது அனைத்து மட்டங்களையும் உட்படுத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
சபா, பெனாம்பாங்கில் மாநில அளவிலான காமாத்தான் விழா கொண்டாட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் அவ்வாறு தெரிவித்தார்.
மாநில முதல் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹஜிஜி நூரும் அந்நிகழ்வில் பங்கேற்றார்.
சுரங்க வாய்ப்பு ஊழலுடன் ஒரு மத்திய அமைச்சர், ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரை உட்படுத்திய வைரல் வீடியோ குறித்தும் பிரதமர் பேசினார்.
இந்த பிரச்சினையில் பொது மக்களின் கவலையை நான் ஒப்புக்கொள்கிறேன்; ஆனால், வெளியில் பரப்பப்படும் வதந்தி, குற்றச்சாட்டு, அவதூறு ஆகியவற்றை வைத்து மட்டுமே நாம் எந்த முடிவுக்கும் வந்து விட முடியாது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC அது குறித்து விசாரிக்கிறது; இருந்தும் நான் அதில் ஏன் தலையிடவில்லை என்றும், யாரையோ காப்பாறப் பார்க்கிறேன் என்ற தோரணையிலும் பேசுகிறார்கள் என டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.
பிரதமர் என்பதற்காக தடாலடி உத்தரவுகளைத் தாம் பிறப்பிக்க முடியாது; அனைத்தும் ஆதாரங்கள் அடிப்படையிலும் சட்டத்தின் படியுமே நடக்க வேண்டுமென்றார் அவர்.