
வாஷிங்டன், டிசம்பர்-2, நீதித் துறையில் தலையிட மாட்டேன் என வாக்குறுதி அளித்திருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தனது மகனுக்கு முழு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தது, போலி தகவல்களை வழங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 54 வயது ஹண்டர் பைடன் (Hunter Biden) குற்றவாளியாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கான தண்டனை இம்மாதம் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கும் ஆவணங்களில் பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
நீதித் துறையில் குறுக்கிட மாட்டேன் என கூறியது உண்மைதான் என்றாலும், அதிபரின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக என் மகன் ஹண்டர் வஞ்சிக்கப்பட்டுள்ளார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சிக் காரணமாக அவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது; அதை அனுமதிக்க முடியாது என்பதால் பொது மன்னிப்பு வழங்குவதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் பைடன் குறிப்பிட்டார்.
ஜனவரி மாத மத்தியில் நான்காண்டு கால அதிபர் பதவியை நிறைவுச் செய்யும் பைடன், அதற்கு முன்பாக தமக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளது பேச்சுப் பொருளாகியுள்ளது.