
பத்து மலை, ஜனவரி-29 – பத்து மலை தைப்பூசத்தை முன்னிட்டு மனிதவள அமைச்சான KESUMA-வின் ‘மடானி ‘பக்தி’ தைப்பூசம்’ பெருந்தொண்டு மூன்றாவது ஆண்டாகத் தொடருகிறது.
‘Reruai Kesuma @Batucaves’ என்ற இச்சேவை மையம் நாளை ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை திறந்திருக்கும்.
பொது மக்களுக்கான சேவைகள், திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல்கள் வாயிலாக சமூகத்தை அணுகுவதே இதன் நோக்கமாகும்.
மலேசியா மடானி கொள்கையின் கீழ் 4 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வில் KESUMA அமைச்சின் சிறப்பு சேவைக் கூடாரங்களில், மக்கள் நலன் சார்ந்த பல்வேறு ஒருங்கிணைந்த சேவைகளை நேரடியாகப் பெற்றுப் பயனடையலாம்.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, HRD Corp, PERKESO, NIOSH, TalentCorp, PTPK உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்கள், இலவச மருத்துவ பரிசோதனை, தொழில் வழிகாட்டுதல், திறன் மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட சேவைகளை வழங்கவுள்ளன.
உச்சக் கட்டமாக ஜனவரி 30-ஆம் தேதி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் ஆகியோர் அங்கு நேரில் வருகை தரவுள்ளனர்.
சேவை, நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடு ஆகிய பண்புகளை மக்களிடையே வேரூன்றச் செய்யும் ஒரு பாலமாக இத்திட்டம் அமைகின்றது.
எனவே, பத்து மலை செல்லும் பக்தர்களும் பொது மக்களும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.



