
குவாலா லங்காட், டிசம்பர் 24-சிலாங்கூர் பந்திங்கில் போலீஸ் அதிகாரிகள் ஓர் ஆடவரை அடித்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
20 வயதான டேனியல் என்ற இளைஞர், நவம்பர் 15-ஆம் தேதி தன் தாத்தாவின் வீட்டில் கைதுச் செய்யப்பட்டபோது, போலீஸார் எனக் கூறிக் கொண்ட மூவர் தன்னை அடித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது தாயார் நவம்பர் 18-ஆம் தேதி போலீஸில் புகார் அளித்தார்.
தந்தையும் சம்பவத்தை நேரில் கண்டதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில், காயம் ஏற்படுத்தியதன் பேரில் அச்சம்பவம் விசாரிக்கப்படுவதாக, குவாலா லங்காட் போலீஸ் துணைத் தலைவர் Sufian Amin கூறினார்.
முன்னதாக, டேனியலுடன் செய்தியாளர் சந்திப்பை நடத்திய அவரின் வழக்கறிஞர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு குற்றவியல் வழக்கு தொடங்குமாறு புக்கிட் அமான் போலீஸை வலியுறுத்தினர்.
இச்சம்பவம், போலீசின் நம்பகத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு குறித்த கேள்விகளை எழுப்புவதாக அவர்கள் கூறிக் கொண்டனர்.



