
புத்ராஜெயா, மே-24 – UN-Habitat என்றழைக்கப்படும் ஐநாவின் மனிதக் குடியேற்றத் திட்டத்திற்கான மாநாட்டு தலைவர் பொறுப்பு மலேசியாவின் கைகளுக்கு நெருங்கி வருகிறது.
KPKT எனப்படும் வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் அவ்வாறு நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
UN-Habitat என்பது நிலைத்தன்மை மிக்க நகரங்களின் மேம்பாட்டை ஊக்குவிக்கும் ஐநாவின் துணை அமைப்பாகும்.
இந்நிலையில் வரும் மே 29-ஆம் தேதியன்று கென்யா தலைநகர் நைரோபியில் UN-Habitat தலைவர் பதவிக்கான போட்டியில், மலேசியாவை KPKT பிரதிநிதிக்கிறது.
அது 2026 முதல் 2029 தவணைக்கான தலைவர் பதவியாகும்.
மலேசியா தலைவரானால், உலகளவில் நகரத் திட்டமிடல் மற்றும் மேம்பாடு தொடர்பான கொள்கைகளை வகுப்பதில் நாடு முக்கியப் பங்காற்ற முடியுமென ஙா கோர் மிங் சொன்னார்.
2018-ல் உலக நகர்ப்புற ஆய்வரங்கை நடத்திய அனுபவம் மலேசியாவுக்கு உண்டு.
உலகம் முழுவதுமிருந்து 25,000 பேராளர்கள் அதில் பங்கேற்றனர்.
இது தவிர, கோலாலம்பூர் மேயரான டத்தோ ஸ்ரீ மைமூனா மொஹமட் ஷாரிஃப் இதற்கு முன் UN-Habitat-டில் நிர்வாக இயக்குநர் என்ற உயர் பதவியை ஏற்ற முதல் ஆசியப் பெண் என்ற பெருமையைப் படைத்துள்ளார்.
இந்த அனுபவங்களை முன்வைத்து மலேசியா இம்முறை தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறது.
தலைவர் பதவியைக் கைப்பற்றினால் உலகளவில் பங்காற்றும் அதே வேளை நாட்டின் நற்பெயரை உயர்த்தவும் வாய்ப்பு ஏற்படுமென்று அமைச்சர் கூறினார்.
உலக அமைப்புகள் எதிலும் நீண்ட காலமாக மலேசியா தலைமையேற்கவில்லை.
ஆகக் கடைசியாக 1996-ஆம் ஆண்டு, தான் ஸ்ரீ ரசாலி இஸ்மாயில் 51-ஆவது ஐநா பொதுப் பேரவையின் தலைவராக இருந்தார்.
அதற்கு முன் அப்போதையத் துணைப் பிரதமரான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஐநாவின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான UNESCO-வின் தலைவராக இருந்தார்.