
கோலாலம்பூர், ஆகஸ்ட்-6 – நெடுஞ்சாலைகளில் MLFF எனப்படும் பல தடங்களுக்கான விரைவான டோல் கட்டண வசூலிப்பு முறை அரசாங்கத்திற்கு நிதி தாக்கங்களை ஏற்படுத்தாது என பொதுப்பணித்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் தெரிவித்தார்.
பொதுப்பணி அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த புதிய இலக்கு தொடர்பான அறிக்கை கடந்த ஜூலை 25ஆம் தேதி அமைச்சரவையிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதன்வழி நெடுஞ்சாலைகளில் பராமரிப்பு சேவை மற்றும் டோல் வசூலிப்பில் சம்பந்தப்பட்ட 33 நிறுவனங்கள் தங்களது வர்த்தகம் தொடர்பான ஒத்துழைப்புக்கான பேச்சுக்களில் ஈடுபட முடியும்.
உதாரணத்திற்கு Plaza Tol Alam Impian , Kemunig – Shah Alam ,நெடுஞ்சாலையில் PNB Prolintas தற்போது Touch ‘n Go மற்றும் CIMBயுடன் பரிட்சார்த்த சோதனை முயற்சிகளை அமல்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் டோல் கட்டண வசூலிப்புக்கான பல தடங்களில் MLFF முறை அமலாக்கத்திற்கான அடிப்படை வசதிகளை தயார்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மக்களவையில் கேள்வி பதில் அமர்வின்போது அகமட் மஸ்லான் கூறினார்.
நெடுஞ்சாலைகளில் MLFF தடங்களில் டோல் செலுத்தாதவர்களை அவர்களின் வாகன எண் பதிவு எண் மூலம் கண்டறியப்பட்டு நோட்டிஸ் வழங்கப்படும் என அகமட் மஸ்லான் தெரிவித்தார்.