
கூச்சிங், ஜூன் 30 – பிந்துலு சமலாஜுவிலுள்ள (Samalaju, Bintulu) மீன்பிடி படகுத்துறையின் அருகே, அடிக்கடி காணப்படும் ‘புடிட்’ என்ற பெரிய முதலை மீனவர்களிடம் உணவை வாங்கி உண்ணும் காணொளி பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை முதல், சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் அந்த காணொளியில் மீனவர்கள் உணவை வீசுவதற்காக அம்முதலை காத்திருப்பதையும் மீனவரின் குரல் கேட்டதும் மெதுவாக ஊர்ந்து வந்து உணவைப் பெறுவதையும் காண முடிக்கின்றது.
இதனிடையே, சரவாக்கில் முதலைகள் மனிதர்களை அடித்து கொல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மீனவர்கள் இத்தகைய செயல்களை தவிர்க்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை சரவாக்கில் ஆற்றங்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஆடவர் முதலையால் தாக்கப்பட்டதாகவும் மறுநாள்தான் அந்நபரின் உடலை மீட்க முடிந்ததென்றும் படவான் மாவட்ட காவல்துறைத் தலைவர், முகமட் இர்வான் ஹபீஸ் முகமட் ரட்ஸி குறிப்பிட்டுள்ளார்.
அதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் குறிப்பாக ஆற்றங்கரையில் மீன் பிடிப்பவர்களும் மீனவர்களும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டுமென்றும் அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.