
பினாங்கில் புதிய இந்து மின்சுடலை கட்டுமானம்; இந்து அறப்பணி வாரியம் அறிவிப்பு
பாகான் டாலாம், பிப்ரவரி-15,
பினாங்கு இந்து அறப்பணி வாரியம், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்து மின்சுடலை (மயானம்) கட்டுமானத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டம் பாகான் டாலாம், ஜாலான் சிராம் பகுதியில், வாரியத்தின் சொந்த நிலத்தில் உள்ள இந்து இடுகாட்டில் உருவாக்கப்படவுள்ளதாக, அதன் தலைவர் RSN ராயர் இன்று தெரிவித்தார்.
பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், செனட்டர் Dr. லிங்கேஷ்ரன் ஆர் அருணாச்சலம் உள்ளிட்டோரும் இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இத்திட்டம், அப்பகுதி வாழ் மக்களுக்கு நவீன மற்றும் வசதியான இறுதிச் சடங்கு சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ராயர் சொன்னார்.
அவ்வகையில் 2 நவீன _incinerator_ எரியூட்டி கருவிகளுடன் மின்சுடலை அமைக்கப்படுவதால், சேவைத் திறன் அதிகரித்து, காத்திருக்கும் நேரமும் குறையும்.
திட்டத்திற்கான RM1.5 மில்லியன் நிதி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமால் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது, இந்து சமூகத்தின் அடிப்படை தேவைகள் சமய மத உணர்வுகளுக்கு அரசாங்கம் காட்டும் அக்கறையை வெளிப்படுத்துவதாக ராயர் குறிப்பிட்டார்.
மின்சுடலைக் கட்டுமானத் திட்டம் திறந்த டெண்டர் முறையில் நடைபெறும் என்றும், இவ்வாண்டு இறுதிக்குள் முழுமையாக நிறைவு பெறும் என்றும் ராயர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்த நவீன மின்சுடலை, இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள பினாங்கு இந்து சமூகத்திற்கு மரியாதையான, முறையான, சுற்றுச்சூழல் தரத்துக்கு ஏற்ப ஒரு முக்கிய வசதியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



