
கோத்தா பாரு, ஜூன் 10 – UPSI பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்கள் உயிர் இழப்புக்கு காரணமான பஸ் விபத்திற்காக அவர்களின் குடும்பத்தினரிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் திடீரென பிரேக் செயல்படாததே இந்த விபத்திற்கான காரணம் என பஸ் ஓட்டுனரான 39 வயதுடைய முகமட் அமிருல் பாடில் சுல்கிப்ளி
( Mohamad Amirul Fadhil zulkifle ) தெரிவித்தார். திரெங்கானுவிலிருந்து பஸ் புறப்பட்டபோது அது நல்ல நிலையிலேயே இருந்தது. கிரிக்கிலுள்ள யானை கடந்து செல்லும் பாலத்திற்கு அருகே திடீரென பஸ்ஸின் பிரேக் செயல் இழந்தது. நான் ஓட்டிச் சென்ற பஸ்ஸில் எந்தவொரு அடையாள அறிகுறியும் காட்டாமலேயே பிரேக் செயல் இழந்ததோடு காற்று அழுத்த முறையும் செயல்படவில்லையென தைப்பிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முகமட் அமிருல் தெரிவித்தார்.
தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்ததாகவும் Air Pressure ரும் வேலை செய்யவில்லை. ஹென்ட் பிரேக்கும் செயல்படவில்லை என்பதால் கியரை மாற்றமுடியவில்லை. மற்ற வாகனத்துடன் மோதுவதை தவிர்க்க முயன்றேன். விபத்து நடப்பதற்கு முன்பு, ஒரு லாரி உட்பட குறைந்தது நான்கு வாகனங்களை கடந்து சென்றது எனக்கு நினைவிருக்கிறது. விபத்து நிகழ்வதற்கு முன் நான் கடைசியாக முந்திச் சென்ற வாகனத்தில் டேஷ்கேம் இருந்தது. நான் வேகமாக ஓட்டவில்லை – மற்ற வாகனங்கள் மீது மோதுவதைத் தவிர்க்க முயற்சித்தேன். பஸ் பிரேக்குகள் செயலிழந்ததால் ஒரு கிலோமீட்டருக்கு மேல் பயணித்தது என்று தாம் மதிப்பிடுவதாகவும் நிலைமை மோசமாகுவதை தடுப்பதற்கு தம்மால் முடிந்த அனைத்தையும் செய்ததாக அவர் கூறினார். ஜெலி-கெரிக் பாதையை தாம் நன்கு அறிந்துள்ளதாகவும் , பஸ்ஸை தாம் வேகமாக ஓட்டவில்லை, என்று முகமட் அமிருல் கண்ணீர்மல்க கூறினார்.