
ஜோர்ஜ்டவுன், ஜூன்-11,
பினாங்கு, ஜோர்ஜ்டவுனில் உள்ள ஜாலான் Dr வு லியன் தேஹ் (Dr Wu Lien Teh) பகுதியில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் ஓராண்டாக 3 வெளிநாட்டவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அம்பலமாகியுள்ளது.
இந்தோனேசியர்களான அம்மூன்று ஆடவர்களும் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட அம்மூவரும் ஒருவரையொருவர் முன்பின் தெரியாதவர்கள் ஆவர்; அவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடப்பிதழ்களை ஒரு சந்தேக நபர் வாங்கிக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.
மூவரின் கால்களும் அடுக்குமாடி வீட்டின் ஜன்னல் கம்பிகளில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது.
அவர்களில் ஓர் ஆடவர் எப்படியோ இந்தோனோசியா ஆச்சேவில் உள்ள தனது குடும்பத்தினருக்கு தான் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்; அதன் பிறகு போலீஸில் புகாரளிக்கப்பட்டு, அம்மூவரும் மீட்கப்பட்டனர்.
இதையடுத்து 1 வெளிநாட்டு பெண் உட்பட 40 முதல் 55 வயதிலான 4 பேர் கைதாகி, விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மூவரும் ‘சிறைபிடிக்கப்பட்டதற்கான’ காரணத்தை கண்டறியவும் பிற சந்தேக நபர்களின் ஈடுபாடு குறித்தும் போலீசார் இன்னும் விசாரித்து வருகின்றனர்.