
கோலாலம்பூர், மே-7 – மே 23 பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் அதன் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட நூருல் இசாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
ஏராளமான தலைவர்கள் நேற்று அவரை ஆதரித்து அறிக்கை வெளியிட்ட நிலையில், வரும் நாட்களில் அது இன்னும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
கட்சித் தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மூத்த மகளான நூருல் இசா பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவராவார்.
அப்பதவியைத் தற்காத்துக் கொள்ள போட்டியிடவிருப்பதாக அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே நூருல் இசாவை துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
பினாங்கு, பேராக், பஹாங், ஜோகூர், மலாக்கா, கெடா, கிளந்தான் மாநில பி.கே.ஆர் மகளிர் பிரிவுகள் நேற்று இசாவை ஆதரித்து அறிக்கை வெளியிட்டன.
சிலாங்கூர் மந்திரி பெசாரும் உதவித் தலைவருமான டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியும் இசாவுக்கு ஆதரவளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நடப்புத் துணைத் தலைவரான டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியின் நிலை இன்னும் தெளிவாக தெரியவில்லை.
அமைச்சர் பொறுப்பிலிருந்து 1 மாத விடுப்புக்குப் பிறகு நேற்று முன்தினம் தான் அவர் பணிக்குத் திரும்பினார்.
தொகுதித் தேர்தல்களில் தமது ஆதரவானவர்கள் பலர் தோல்வியுற்றதால் அவர் விரக்தியில் இருப்பதாகவும், துணைத் தலைவர் பதவியைத் தற்காக்க அவர் போட்டியிட மாட்டார் என்றும் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து நூருல் இசா எதுவும் வெளிப்படையாக சொல்லா விட்டாலும், அது உறுதிச் செய்யப்பட்ட ஒன்று என நம்பத்தகுந்த கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன