
பீகார், பிப்ரவரி 26-கடந்த செவ்வாய்க்கிழமை பீகாரில் விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருந்த திருமண விழா ஒன்றில், திடீரென ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் அவ்விடம் பெரும் பரபரப்புக்குள்ளாகியது.
மணமகளின் காதலன் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென மேடையில் ஏறி, திருமண கோலத்தில் நின்றிருந்த மணமகளை வயிற்றில் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளான்.
முதலில் பட்டாசு சத்தம் என நினைத்த உறவினர்கள், பின்னர் மணமகள் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மணமகன் உடனே அப்பெண்ணை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தப்பியோடிய குற்றவாளியைப் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மணமகளின் குடும்பத்தாரும் அவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.



